காலை 8 மணிக்கே எதிர் வெயில் சுள்ளென்று அடிக்க
ஆரம்பித்துவிட்டது. 9
மணிக்கு மேல், வியர்வையில் குளித்துவிடுகிறது தேகம்.
உடம்பில் இருக்கும் தாது உப்புகள் எல்லாம் இப்படி வெளியேறின பிறகு, எங்கிருந்து குழந்தைகள் உற்சாகமாக ஓடி
ஆடுவது? நாம் எனர்ஜியாக வேலை பார்ப்பது? இதோ, அதற்கான வழியைச் சொல்கிறார், இயற்கை மருத்துவர் யோ.தீபா. இவர் சொல்லும் ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகளை தினம் ஒன்றாகத் தயாரித்து
குழந்தைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் குடியுங்கள். எனர்ஜியாக வேலையைத்
தொடருங்கள்.
குட்டீஸ்களுக்கு...
1. அரைத் துண்டு ஆப்பிள், அரைத் துண்டு பீட்ரூட், ஒரு கேரட் மூன்றையும் தேவையான வெல்லம்
சேர்த்து மிக்சியில் அரைத்து, வடிகட்டுங்கள்.
ஏபிசி ஜூஸ் ரெடி. விருப்பப்பட்டால், ஓர் ஏலக்காய் சேர்த்து அரைக்கலாம். அனைத்துச் சத்துக்களும் நிறைந்த ஜூஸ்
இது.
2. ஒரு கேரட், ஓர் ஆரஞ்சு இரண்டையும் சுத்தமாக்கி, தேவையான வெல்லம் மற்றும் சிறு துண்டு
இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டினால், டார்க் ஆரஞ்சு கலரில் பீட்டா கரோட்டின் நிறைந்த ஜூஸ் ரெடி.
3. கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட
புதினா இலைகளுடன் சிறு இஞ்சித் துண்டு மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்து
வடிகட்டிப் பருகலாம்.
4. கிர்ணிப்பழத்தைக் கொஞ்சம் வெல்லம்
சேர்த்து அரையுங்கள். இது,
சம்மரில்
குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்னையைத் தடுக்கும்.
5. ஒரு துண்டு கேரட், ஆரஞ்சு சுளைகள் 6, அரைத் துண்டு ஆப்பிள் மூன்றுடன் சிறு
துண்டு இஞ்சி,
ஒரு சிட்டிகை
மஞ்சள்பொடி சேர்த்து அரைத்து வடிகட்டவும். இந்த ஜூஸைக் குடிக்கும் குழந்தைகளுக்கு
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சம்மரில் வரும் தொற்றுநோய்கள் கிட்டே
நெருங்காது.
குறிப்பு: எல்லா ஜூஸ்களிலும் கட்டாயம் பானைத்
தண்ணீரையே பயன்படுத்துங்கள். அப்போதுதான் தாது உப்புகள் கிடைக்கும்.
சர்க்கரைக்குப் பதில் வெல்லம் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைப்பதுடன், உணவுகளில் இருக்கும் கால்சியத்தை உடம்பு
உறிஞ்சிக்கொள்ளவும் வெல்லம் உதவி செய்யும்.
பெரியவர்களுக்கு...
1. தோல் சீவிய மாம்பழத் துண்டுகளையும், பேரிக்காய்த் துண்டுகளையும் மிக்ஸியில்
அரைத்து, அப்படியே ஸ்மூத்தியாக குடித்தால், வெயில் நேர சோர்வு நீங்கி ஃபிரெஷ்ஷாக
உணர்வீர்கள். வெயில் காலத்தில் அதிகமாகும் ரத்த அழுத்தம், இந்த ஸ்மூத்தியைக் குடித்தால்
கன்ட்ரோலில் இருக்கும்.
2. தோல் சீவிய அரைத் துண்டு ஆப்பிள், அரைத் துண்டு பீட்ரூட், ஒரு கேரட், ஒரு பெரிய துண்டு அன்னாச்சிப்பழம்
நான்கையும் அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கவும். கால் வலி, கால் வீக்கம் போன்ற பிரச்னைகள்
கட்டுப்படும்.
3. வெயிலுக்கு
பெஸ்ட் சாய்ஸ், மோர். பால் அலர்ஜி இருப்பவர்கள், தேங்காய்ப்பாலில்
மோர் தயாரிக்கலாம். திக்கான ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலில் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, ஓர் இரவு முழுக்க
அப்படியே வைத்தால் தயிராகிவிடும். இந்தத் தயிரை அப்படியே மோராக்கியும்
குடிக்கலாம். அல்லது இஞ்சி, புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை
சேர்த்து அரைத்த விழுதில், ஒரு டீஸ்பூன் தேங்காய்ப்பால் மோர் கலந்து
குடிக்கலாம். குடிக்கும்போது இந்துப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். ஜீரணத் தொல்லை, அசிடிட்டித்
தொல்லை இரண்டையும் சரியாக்கும் இந்தத் தேங்காய்ப்பால் மோர்.
4.
அரை
வெள்ளரிக்காய்,
ஒரு பேரிக்காய், நான்கு பசலைக்கீரை ஆகியவற்றை அரைத்து
வடிகட்டினால்,
இரும்புச்சத்து
மற்றும் கால்சியம் நிறைந்த ஜூஸ் ரெடி. இதற்கு உப்பு, வெல்லம் இரண்டுமே தேவையில்லை.
5. உடற்பருமனாக இருக்கும் பெண்கள், தலா ஒரு சிறு துண்டு வெள்ளைபூசணி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் மூன்றையும் மிக்சியில்
அரைத்து வடிகட்டி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்.