பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு
சென்னை: பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பி.இ., பிடெக், பி.ஆர்க்., படிப்புகளுக்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.79,600ம் அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.1,41,200ம் அதிகபட்சமாக ரூ.3.34 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3 ஆண்டு எம்.சி.ஏ., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.88,500 எனவும் அதிகபட்சமாக ரூ.1,94,100 எனவும், 2 ஆண்டு எம்.பி.ஏ., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.85,000 ஆகவும், அதிகபட்சமாக ரூ. 1,95,200 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக்கில் கற்பிக்கப்படும் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.67,900 எனவும், அதிகபட்சமாக ரூ.1,40,900 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.