கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் உலக மகளிர் கொண்டாட்டங்கள் கல்லூரி வளாகத்தில் களைகட்டின.
உலக மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மகளிர் மேம்பாட்டு மையம் மற்றும் தமிழ் மன்றம் சார்பில், உலக மகளிர் தினவிழா, கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்.என்.ஆர். சன்ஸ் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். மகளிர் மேம்பாட்டு மைய மாணவியர் தலைவி ஸ்ரேயா வரவேற்றார். மகளிர் மேம்பாட்டு மைய செயலர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். அதைத்தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்த விளங்கும் மாணவிகளுக்கு முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்குத் தேவை அன்பா? அதிகாரமா? என்ற தலைப்பில், மகளிர் தின சிறப்பு பட்டிமன்றம் நடுவர் கோவை சத்யா தலைமையில் நடைபெற்றது. இதில் அன்பே என்ற தலைப்பிலும், அதிகாரமே என்ற தலைப்பிலும் தலா 3 மாணவிகள் உரையாற்றினர். பட்டிமன்றத்தை தொடர்ந்து ஆங்கிலம் முதலாமாண்டு மாணவி பவதாரணி கராத்தே பயிற்சியை செய்து காட்டினார்.
முன்னதாக புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு உதவும் வகையில், சிகை தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் என 185 பேர் கலந்து கொண்டு சிகை தானம் செய்தனர். புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு செயற்கை தலைமுடி தயாரிப்பதற்காக, கிரீன் டிரெண்ட்ஸ் நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் மற்றும் மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் எஸ்.தீனா, செயலர் ஜி.கவிதா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.