இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா
டோக்கியோ: சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக, ஒலிம்பிக் தடகளம் போட்டியில் தங்கம் வென்றுள்ளது இந்தியா.
இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இது ஒரு சரித்திர சாதனை என்று விளையாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஹரியானா மாநிலத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார் .
கடினமான சூழ்நிலை
டோக்கியோவின் சீதோஷன நிலைக்கு ஏற்ப ஈட்டி எறிவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு தங்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.
முதல் மூன்று சுற்றுகளில் அதிகபட்சமாக 87.58 மீ. தூரம் வீசி நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தினார். ஆரம்பத்திலேயே அவர் தனது முழு திறனையும் வெளிப்படுத்தியதுதான் வெற்றிக்கு வழி வகுத்தது. 4வது மற்றும் 5வது சுற்றுகளில் வீசியபோது நீரஜ் சோப்ரா கோட்டைத் தாண்டியதால் பவுல் என அறிவிக்கப்பட்டு அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
5வது சுற்றின் முடிவிலும் நீரஜ் சோப்ரா தான் முன்னிலை வகித்தார். இறுதியில் பிற வீரர்களை விட அதிக தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா.
சுதந்திர இந்தியாவில் முதல் தங்கம் சுதந்திர இந்தியா முதன் முறையாக ஒலிம்பிக்கில் தடகளம் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறது. அதுவும் இதுவரை நமது நாடு பெரிதும் சோபிக்காத தடகளம் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
கடந்த 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் கடைசியாக இந்தியா பதக்கம் வென்றிருந்தது. நார்மன் பிட்சர்ட் 200
மீ. ஓட்டம் மற்றும் 200
மீ. தடை ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். அதன்பிறகு தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுதான்.
பொதுவாக ஹாக்கி, டென்னிஸ், பேட்மின்டன், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் இது மட்டும்தான் இந்திய வீரர்கள் சோபிப்பது வழக்கம். ஈட்டி எறிதல் அதுமட்டுமின்றி பெரிய அளவுக்கு ஸ்பான்சர்கள் அல்லது கவனம் கிடைக்காத ஒரு தடகள போட்டி ஈட்டி எறிதல். அதில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார் என்பதால் இனிமேல் தமிழ்நாடு உட்பட நாடு முழுக்க மைதானங்களில் மீண்டும் வீரர்களால் ஈட்டி கையில் எடுக்கப்படும்,
எறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சாதனைக்கு பிள்ளையார் சுழி
தமிழக தடகள சங்க செயலாளர் லதா சேகர் இதுபற்றி கூறுகையில், இதுவரை கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. மேல் மேலும் ஒலிம்பிக்கில் சாதிக்க இந்த வெற்றிதான் பிள்ளையார் சுழியாக எடுக்கப்படும். சர்வதேச அளவில் நம்மாலும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்துள்ளோம். வரும் தலைமைக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளோம்.
நமது மக்கள் தொகையை ஒப்பிட்டால் விளையாட்டில் பங்கேற்போர் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. எனவேதான் அதிகம் பதக்கம் வெல்ல முடியவில்லை. கடந்த ஒலிம்பிக்கில் பெண் வட்டு எறிதலில் 8வது இடம் பிடித்தோம். தொடர்ந்து எறிதல் போன்ற விளையாட்டுகளில் நமக்கு சாதகம் உள்ளது. இதில் கவனம் செலுத்தி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டால் கூடுதலாக பதக்கங்களை வெல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மைதானங்களில் ஈட்டிகள் எடுக்கப்படட்டும்
குறிப்பிட்ட காலம் முன்புவரைகூற, கிராமப்புற பள்ளிகளில் ஈட்டி எறிதல் விளையாட்டு வகுப்புகளில் ஒரு அங்கமாக இருந்தது. வரவர விளையாட்டு வகுப்புகளும் இல்லை,
அதிலும் குறிப்பாக ஈட்டி எறிதல் இல்லை. கிரிக்கெட்,
கால்பந்து,
கபடி,
வாலிபால் போன்ற விளையாட்டுக்களோடு நமது பள்ளிகளில் விளையாட்டுகளை முடித்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் இந்த வெற்றி மிகப்பெரிய திருப்புமுனையை இந்திய விளையாட்டு வரலாற்றில் ஏற்படுத்தப் போகிறது. வருங்காலத்துக்கு உரம் அளிக்க போகிறது என்ற நம்பிக்கை விளையாட்டு வீரர்கள்,
குறிப்பாக,
தடகள விளையாட்டு வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தங்க மகன்
இதனிடையே நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்திய முதல் குடிமகன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடமிருந்து முதல் வந்தது.
தங்கம் வென்றதன் மூலமாக இந்தியா பதக்கப் பட்டியலில் வேகமாக முன்னேறி 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நீரஜ் சோப்ரா கடந்த 3
மாதங்களாக ஸ்வீடன் நாட்டுக்குச் சென்று பயிற்சி பெற்றார். ராணுவத்தில் ஹவில்தார் பதவியிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.