பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை கணக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021
ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக்
கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னை
பல்கலைக்கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு
தனது அறிக்கையை அளித்துள்ளது.
10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே
வெளியிடப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான
மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில்,
12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக்
கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி மதிப்பெண் கணக்கீடு முறை:
1. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) - 50%
2. 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும்
பெற்ற எழுத்துமுறை (Written)
மதிப்பெண் மட்டும்) - 20%
3. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு (Practical) / அக மதிப்பீடு (Internal) - 30%
· 12ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும்
அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
செய்முறைத் தேர்வு
இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10)
பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு (Extrapolated
to 30 Marks) முழுவதும் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படும்.
·
·கரோனா
பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு
அவர்களின் 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படும்.
·
11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்
வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10ஆம்
வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12ஆம்
வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
·
கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி
அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு
தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு, 35 விழுக்காடு
மதிப்பெண் வழங்கப்படும்.
·
11ஆம் வகுப்பு
எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு அக மதிப்பீடு,
செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத
மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
·
ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு, உச்ச
நீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.
· இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக்
குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு,
அவர்கள் விரும்பினால் 12
ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாற
நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக
அறிவிக்கப்படும்.
· தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கரோனா பெருந்தொற்றுப் பரவல்
சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து,
தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான கால அட்டவணை
பின்னர் அறிவிக்கப்படும்''.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.